அகநானூற்றில் இல்லற மாண்புகள்
Author : முனைவர் க.வீரத்தமிழன்
Abstract :
‘காதல் வாழ்வு உயர்ந்த வாழ்வு’ என்பது தொன்மைத் தமிழரின் தெள்ளியக் கோட்பாடாகும். இக்காதலிலே பண்டைத்தமிழர் இன்பத்தையும் பொருளையும் அறத்தையும் கண்டனர். எனவே, வாழ்க்கையில் சிறந்ததாக பயிற்ற வேண்டிய அனைத்துப் பேறுகளையும் அக்காதல் ஒழுக்கமே வழங்குவதால் சங்கத்தமிழர் காதலைப் பெரிதும் போற்றிப் பாடினர். காதலை, காமம், அன்பு, அருள், நட்பு, கேண்மை எனவும் பலவாறு குறித்தனர். அகநூல்கள் களவும் கற்புமாக இருவகைக் கைக்கோள்களால் (ஒழுக்கம்) நிகழும் அகப்பொருள் வாழ்வியல் என்ற நிறைவையே எய்துகின்றது.
அகப்பொருள் வாழ்வியலில் இல்லற வாழ்வியலானது மனித வாழ்வின் அடிப்படை. சமூக அமைப்பின் அடித்தளம் எனக் கருதப்படும் திருமணம் என்னும் தொடர்பிலிருந்து எழும் சமூக அமைப்பே இல்லறம். இவ் இல்லறம் என்பது கணவன்-மனைவி என்ற உறவு, பெற்றோர்-மக்கள் என்ற நேர்வரை உறவு, உடன்பிறந்தோர் என்ற இணைவரை உறவு ஆகிய பல உறவுகள் பின்னிப் பிணைந்திருக்கும். அகநானூறு அக வாழ்வுக்கான நெறியினை மட்டும் சுட்டாது அதற்கு அடிப்படையாக இருந்த தனிமனிதனின் ஒழுக்கம் தொட்டு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பவற்றையும், மனித சமுதாயத்தின் அமைப்பிற்கும் அக உணர்வுகளுக்கும் உயிர்நாடியாக விளங்கும் காதல் உணர்வில் உள்ளம் ஈடுபட்டு நிற்பதையும் அகவாழ்வியல் என்னும் குறியீட்டோடு எடுத்துக்காட்டுகின்றன. விட்டுக் கொடுக்கும் தியாக உணர்வு, பொறுப்புகளைப் பங்கிட்டு ஏற்றல், ஒத்துழைப்பு மனப்பான்மை போன்ற பண்புகள் இல்லற வாழ்வியலுக்கு இன்றியமையாதவை. இவ் இல்லறவாழ்வில் கணவன், மனைவி விருந்தோம்பி வேளாண்மை செய்வதும், வினையே ஆடவர்க்குயிராய் விளங்குவதும், பொன்போற் புதல்வரைப் பார்ப்பதும், சுற்றம் தழுவுதலும், ஆண்மையைப் பேணுவதும், பெண்மையைக் காப்பதும் போன்ற இல்லற மாண்புகளே அகநானூற்றில் எதிரொலிக்கின்றது.
Keywords :
அகம், இல்லறம், மனையாள், விருந்தோம்பல்